திருவண்ணாமலை, மே 26-திருவண்ணாமலை மாவட்டம்சேத்துப்பட்டு வட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் இமாபுரம் கிராமத்தில் வசிப்பவர் சீனு. இவர் ஆரணியில் உள்ள சுந்தரம் நிதி நிறுவனத்தில்தவனை முறையில் டாடா ஏஸ் வண்டி வாங்கினார். அதில் 16 தவனைகள் செலுத்தி விட்டார். மீதமுள்ள 3 தவணைத் தொகை செலுத்தாததற்கு சுந்தரம் நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடியால், மன உளைச்சல் அடைந்து சீனு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சீனு அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரித்திக் ரோஷன், மகள் தீவதர்ஷினி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய மகள் பிரிதிஸ்ரீ (8) உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,குடும்பத் தலைவர் சீனுவையே குற்றவாளியாக்கி, முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து இமாபுரம் கிராமத்தில் சீனுவின் சகோதரர் மஞ்சுநாதன், தங்கை கிருஷ்ணவேனி ஆகியோரிடம் விசாரித்ததில், சுந்தரம் நிதி நிறுவனம் தந்த எல்லை மீறிய தொல்லைகள் ஊர்ஜிதமானதை அடுத்து, பெரணமல்லூர் காவல் நிலையத்தில் இறந்த சீனுவின் தங்கை சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்டஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டது. உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாரி, டி.கே.வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெரணமல்லூர் சேகரன், வி.சுப்பிரமணி, ஜா.வே.சிவராமன், கே.வெங்கடேசன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்.ராதாகிருஷ்ணன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர்பெ.அரிதாசு, பலராமன், ராமதாஸ் ஆகியோர் உடனிருந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜ் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரிடம் அழுத்தம் தரப்பட்டது. அதன்படி முதல் தகவல் அறிககையில் சுந்தரம் நிதிநிறுவன உரிமையாளர் மற்றும் அதிகாரிகளைக் குற்றவாளியாகச் சேர்த்து முதல் தகவல் அறிக்கை வழங்க வலியுறுத்தப்பட்டது. தவறும்பட்சத்தில் அதுவரை இறந்தவர்கள் உடல்களைப் பெறுவதில்லை என்றும், திங்களன்று (மே 27) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புபெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.